Image

http://www.pustaka.co.in

இருள் வாக்கு!

Irul Vaakku!

Author:

தேவிபாலா

Devibala

For more books

http://www.pustaka.co.in/home/author/devibala-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

1

“அத்தான் வரப் போறார் இன்னிக்கு!”

லாவண்யா அதிகாலையில் மூன்று மணிக்கெல்லாம் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து விட்டாள். உறக்கம் பிடிக்கவில்லை. நிலை கொள்ளவில்லை.

நாலு வருடங்களுக்கு முன்னால் மருத்துவத்தில் உயர் படிப்பு படிக்க அயல் நாடு சென்ற சம்பத் இன்று படிப்பை முடித்துக் கொண்டு திரும்புகிறான்.

அத்தையின் ஒரே பிள்ளை சம்பத்.

சிறு வயதில் கணவனை இழந்த அத்தை, ஆதரவற்று மகனுடன் தணித்து நின்ற போது அவரை அணைத்துக் கொண்டவர் அத்தையின் ஒரே தம்பியான லாவண்யாவின் அப்பாதான்.

லாவண்யாவின் அம்மா இதய நோயாளி. லாவண்யாவின் எட்டாவது வயதில் அம்மா மரித்து விட, லாவண்யாவுக்கு தாயாக இருந்து வளர்த்தது அத்தைதான்.

அந்த அத்தையின் ஒரே பிள்ளை தான் சம்பத்.

சிறு வயது முதலே ஒரே வீட்டில் வளர்ந்தவர்கள், தெருவிலுள்ள ஈ, காக்கை பாக்கியில்லாமல் அவர்களை ஜோடியாக இணைத்து பேசி விட்டது, லாவண்யாவின் பத்தாவது வயது முதலே.

அப்பாகூட ஓரோர் சமயம் அதை ஆதரிக்கவில்லை.

லாவண்யா தன் பதின் மூன்றாவது வயதில் பூத்த போது --

“அடுத்தது கல்யாணம்தானா நடேசன்?”

“கல்யாணமா?”

“ஆமா பொண்ணு வயசுக்கு வந்தாச்சு, மாப்ளை ரெடியா இருக்கே வீட்ல?”

“சம்பத் இப்பத்தான் ப்ளஸ் டூ படிக்கிறான். சின்னக் குழந்தை அவன்.”

"ஆனாலும் அவன் தானே உங்க மாப்ளை?”

“ஆமாம்னு சொல்லிட்டுப் போயேண்டா தம்பீ!”

“அக்கா... நான் வேண்டாம்னா சொல்றேன். ஆனாலும் நாமமட்டும் நினைச்சா போதுமா? தெய்வம் நினைக்க வேண்டாமா? ரெண்டும் வளரத் தொடங்கியாச்சு ஆபத்தான பருவம் ஆரம்பம். இனி ஆசைகளை வளர்க்க வேண்டாம். நடக்கற நேரத்துல தானா நடக்கட்டும்.”

அப்பா பேசும் போதெல்லாம் முற்றுப் புள்ளி வைத்து விடுவார்.

ஆனாலும் லாவண்யா தினம் தினம் சம்பத் மேலுள்ள ஆசைகளை வளர்க்கத் தான் செய்தாள்.

அவனும் அவளிடம் அன்பாகத்தான் இருந்தான்.

ப்ளஸ் டூ முடித்ததும் டாக்டருக்குப் படிக்க ஆசைப்பட்டான் அதை அம்மாவிடம் சொன்னான்.

“தபாரு தம்பீ! இதெல்லாம் பெரிய ஆசை. நீ அப்பா இல்லாத பிள்ளை. நம்மால முடியாது ராஜா!”

நடேசன் சகல ஏற்பாடுகளையும் செய்யத் தொடங்கி விட்டார்.

சம்பத்தின் நல்ல மதிப்பெண்களும், நடேசனின் செல்வாக்கு. பணபலம் எல்லாமாக அவனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டது. அவன் மருத்துவப் படிப்பை முடித்து விட்டான்.

சம்பத் முதலாவதாகத் தேறி தங்க மெடல் மாணவனாக வெளிப்பட்ட போது, அயல்நாட்டுக்கு உயர் படிப்புக்குச் செல்ல வாய்ப்பு வந்தது.

அம்மாவுக்கு விருப்பமில்லை.

மாமாதான் சந்தோஷமாக பாதிச் செலவை ஏற்றுக் கொண்டு அவனை அனுப்பி வைத்தார்.

நாலு வருட காலம்...

இந்த நாலு வருடங்களில் எம்.பி.ஏ முடித்து விட்டாள் லாவண்யா. அப்பாவின் கம்பெனி நிர்வாகங்களை இப்போதெல்லாம் முழுமையாக கவனிப்பது அவள் தான்.

சம்பத்துக்கு சகல வசதிகளோடு நர்சிங் ஹோம் ஒன்று கட்டவும் திட்டமிருந்தது.

இதோ இன்று சம்பத் வருகிறான்.

லாவண்யா நாலு மணிக்கே எழுந்து குளித்து, ஈரத் தலையை ஆற்றுக் கட்டாக அமைத்துக் கொண்டு எளிமையான கைத்தறிச் சேலையில் ஒரு தேவதை போலிருந்தாள்.

அவளது பால்கோவா நிறத்துக்கு மாதுளம்பூ நிற சேலை அம்சமாகப் பொருந்தியிருந்தது.

"அத்தே காபி!”

அத்தை விழித்துக் கொண்டார்.

வீட்டில் வேலைக்காரர்கள், சமையல் மாமி என்று சகலரும் இருந்தாலும் அத்தை, அப்பாவுக்கு காலைக் காபி லாவண்யா தான்.

"இப்படி வந்து உட்காருடா தங்கம்!”

“என்னத்தே?”

அவளை அருகில் இருத்தி தலையைத் தடவிக் கொடுத்தார் அத்தை.

“சம்பத் வரப்போற சந்தோஷமா? அவள் எனக்குப் பிள்ளையா பிறந்ததைவிட, நீ மருமகளா ஆகப் போறது தான் பெருமைடா கண்ணு. அவன் வந்ததும், முதல் வேலை முகூர்த்தம் குறிக்கறது தான். இனியும் தள்ளிப் போக நான் சம்மதிக்க மாட்டேன்!"

“சரி அத்தே சீக்கிரம்! ஒன்பது மணிக்கு ஃப்ளைட்!”

லாவண்யா பரபரப்பாகி இயங்கத் தொடங்கி விட்டாள்.

வீடே, விழாக்கோலம் காண

நடேசனின் ரத்த அழுத்தம் கூடிப் போயிருந்தது, பெரிய படிப்பு முடித்து சம்பத் வரப் போகிறான். பெருமை பிடிபடவில்லை அவருக்கு.

சம்பத் குறிப்பிட்ட விமானத்தில் வருவதாக கேபிள் வந்திருந்ததால், சகலரும் தயாராகி விட்டார்கள்.

“அத்தே புறப்படுங்க?”

“இல்லைமா! நீயும் அப்பாவும் போங்க. நான் ஏர்போர்ட்டுக்கு வரலை!”

“என்னத்தே நீங்க. அவர் உங்க பிள்ளை. நீங்க வராம யார் வருவா?”

“இல்லைடா. அவனைப் பார்த்த சந்தோஷத்துல படபடப்பு அதிகமாகும் எனக்கு. ரத்த அழுத்தம் கூடும். ஏடா கூடமா நான் ஏர்போர்ட்ல மயங்கி விழுந்தா அபசகுனம், நீங்க போங்க?”

“ஆமாண்டா லாவண். அக்கா சொல்றது சரிதான். புறப்படு!"

சர்வதேச விமான நிலையத்துக்கு எட்டரைக்கு வந்து விட்டார்கள்.

விசாரணைப் பகுதியில் கேட்க, விமானம் வரும் நேரம் 9:10 என்றார்கள்.

லாவண்யாவுக்கே இதயத் துடிப்பு கூடத் தொடங்கியது.

“லாவண்!”

"சொல்லுங்க அத்தான்!”

“நான் ஃபாரின் போறது உனக்கு சம்மதம் தானே?"

“ஏன்?”

“நாலு வருஷம் பிரிஞ்சு இருக்கணும். அப்புறம்தான் கல்யாணம்.”

“ஆகட்டுமே?"

“வரும்போது உனக்கு என்ன வாங்கிட்டு வரட்டும் நான்?”

"உங்க மனசை மட்டும் சேதாரமில்லாம திரும்பக் கொண்டு வந்து ஒப்படைச்சிட்டாப் போதும், வேற எதுவும் வேண்டாம்."

“என்னை நீ நம்பலையா லாவண்?”

“அப்படி நான் சொன்னேனா?”

“ஃபாரின் போயிட்டா, மனசு மாறிடும்னு நீயும் பயப்படறியா லாவண்?”

“இல்லை உங்களை, நான் நம்பறேன். ஆனாலும் எனக்குச் சொந்தமான பொருளை பாதுகாக்கச் சொல்லி நான் சொல்றது தப்பா அத்தான்?”

“அழகாப் பேசற!”

சட்டெனக் கலைந்தாள் லாவண்யா.

நேரம்: 8-40.

லவுன்சில் இருப்பு கொள்ளாமல், மெல்ல எழுந்து நடக்கத் தொடங்கினாள்.

அப்போது தான் அவன் பார்வை சடாரென அங்கே நிலைத்தது.

அந்தப் பெண் மிரள மிரள விழித்தபடி, அலையக் குலைய ஓடி வந்து கொண்டிருந்தாள்.

லாவண்யா கூர்மையானாள்.

'இவள் காவ்யா அல்லவா? என்னோடு கல்லூரியில் படித்த காவ்யா. ஏன் இப்படி யாரோ துரத்திக் கொண்டு வருவது போல ஓடி வருகிறாள்? என்ன ஆபத்து இந்தப் பெண்ணுக்கு?"

லாவண்யா ஓட்டமாக அவளை நெருங்கி சடாரெனத் தடுத்தாள்.

"ஏய் காவ்யா நில்லுப்பா!”

அவளின் மேல் மோதிக் கொண்டு நின்ற காவ்யா, “லவி... நீ... நீயா?”

“நான் தான். நீயேன் இப்பிடி ஓடி வர்ற?”

“எ... எனக்கு ஆபத்து லவி... என்னைக் காப்பாத்து"

“ஆபத்தா? என்ன ஆபத்துடி?”

“எதையும் பேச நேரமில்லை லவி. அவன் துரத்திட்டு வந்துட்டே இருக்கான். அவன் கண்ணுல நான் படக் கூடாது. என்னைக் காப்பாத்தும்மா!”

“விவரமாச் சொல்லுடி!”

"விவரம் அப்புறம். ப்ளீஸ் லவி!”

“சரி நீ வா!” அவளை இழுத்துக் கொண்டு வெளியே வந்த லாவண்யா, கார் பார்க்கிங் பகுதிக்குள் நுழைந்தாள்.

அவர்களது, அயல் நாட்டுக்கார், படகு போல் இடத்தை ஆக்ரமித்துக் கொண்டிருக்க -

அதைத் திறந்தாள்.

“உள்ள போய் உட்காரு. எங்கத்தான் வர்ற நேரமாச்சு, மீதியை அப்புறமா பேசிக்கலாம்!” காவ்யாவை உள்ளே வைத்துப் பூட்டினாள். அவசரமாக லவுன்சை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

விமானத்தின் அலுமினியப் புள்ளி ஆகாயத்தில் பெரிதாகத் தொடங்கியது.

*****

2

விமானம் ரன்வேயில் தவழ்ந்து நிலைபெற, எஸ்கலேட்டர் அமைக்கப்பட்டு, காந்தக் கதவுகள் விலக... தலைகள் உற்பத்தியானது.

சம்பத் உச்சியில் நின்று கையசைத்தான்.

லாவண்யா சிரிப்புடன் பதிலுக்கு கை ஆட்டினாள்.

வரும் போது இருந்த பரபரப்பும், எதிர்பார்ப்பும் பெருமளவு குறைந்து போயிருந்தது லாவண்யாவுக்கு.

காவ்யாவின் பதட்டமும், பயமும் கணிசமான அளவு அவளை பாதித்து விட்டிருந்தது.

'யார் துரத்துகிறார்கள், என்ன அபாயம் இந்தப் பெண்ணுக்கு?’

சம்பத் வந்து விட்டான்.

மாமா மாலையைப் போட முயல –

“உங்க மக போடட்டும். உரிமையுள்ள பெண்ணாச்சே. நீங்க போடுங்க மேடம்!” யாரோ சொல்ல, “வேண்டாம். அதை மங்கல சப்தத்தோட போடட்டும்!” அப்பா மறுத்து விட்டார். சம்பத்தை இறுகத் தழுவிக் கொண்டார். “செளக்யமா லாவண்?” அவளருகில் நெருங்கி கிசுகிசுப்பான தொனியில் கேட்டான் சம்பத். அவனது கனத்த மீசைக்குள், ரோஜா நிற உதடுகள் மெல்ல அசைந்தது படு வசீகரமாக இருந்தது.

சட்டென கன்னம் சிவந்து போன லாவன்யா, பதில் வார்த்தைக்குத் தத்தளித்து –

“ம்!” என்றாள்.

“அம்மா வரலையா மாமா?”

“இல்லைபா உனக்காக ஆரத்தியோட வீட்ல காத்திருக்காங்க வா. போகலாம்!”

காரை நோக்கி நடந்தார்கள்.

லாவண்யா பூட்டு திறந்து கதவைப் பிளக்க, சம்பத் காலை வைத்த சமயம்

“அத்தான் ஒரு நிமிஷம்! உள்ளே ஒரு பொண்ணு இருக்கு!”

"என்னம்மா லாவண் இதெல்லாம்?”